Pages

Monday, January 29, 2018

ஆண்டாள் - மடல் 3. வைரமுத்தின் 10 பிழைகள்.



"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னுமுயிர்க்கு" என்பது வள்ளுவ மரபு.  "கடிது ஓச்சி,  மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் "  என்பது அரசனுக்கு புகட்டிய வள்ளுவமாயினும் இம்மரபு அறிவுலகத்திற்கு அதிகம் பொருந்தும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. "சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா", என்று கேட்டு தமிழ்ப்பெருங்கவியான ஔவையாரின் ஞானச்செருக்கை சோதித்தது இம்மண்ணின் முருகமரபு. "நீயே முக்கண் முதல்வனும் ஆகுக" - ஆனால் உன் பாட்டு பைசாவுக்கு தேறாது என்றது நக்கீர மரபு.

இந்த தமிழ்மரபுகளை ஒருங்கிணைத்தால் கிடைக்கின்ற அறிவுலகின் அழகை, இம்மண்ணைத்தாண்டி வேறெங்கு வரலாற்றின்பதிவாக காணமுடியும் என்று நான் அறிந்தேனில்லை. இவற்றை மனதில் தாங்கி, ஆண்டாளைப்பற்றி வைரமுத்து பொழிந்த பிழைகளை நோக்கிக்காண்பதற்கு, மூன்று வாரங்கள் பொறுத்திருந்தது தேவைதான்.

1) எந்த ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையும் புனைவு(fiction), வருணனை(commentary), மிகையான புகழ்ச்சி  ஆகியவற்றை கொண்டிராது. ஆய்வுக்கட்டுரைக்கென்று இலக்கணம் உண்டு. வைரமுத்தின் கட்டுரையில் வருணனையும், புனைவும் கவிதை இலக்கியத்தில் இருப்பது போன்றே மிகுந்து கிடக்கின்றன. ஆதலால் அது ஆராய்ச்சிக்கட்டுரையே அல்ல.

2) சிறந்த கவிஞர். தமிழாற்றல் கொண்டவர். நூல் கற்றவர் என்று, ஆண்டாளை புகழ்ந்து சொற்பொழிவாற்ற அழைத்த இடத்தில், தினமணியில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு எழுதிய கட்டுரையை அப்படியே படித்தது சொற்பொழிவும் அல்ல.

3) "சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.....மக்களை நோக்கி இறங்கி வந்தது."   ---வைரமுத்து.

இது அப்பட்டமான வரலாற்று திரிப்பு.

சமண-பௌத்த மதங்களின் வீழ்ச்சியே, தமிழ் ஆதிசைவ சமயத்தாலும், மாலிய சமயமான விண்ணவத்தாலும் ஏற்பட்டது. வைதீகம் என்பது, வடமொழி வேதங்களை வழிபட்டு, உயிர்ப்பலி வேள்விகளை செய்து சிறுபான்மையாக உலவி வந்தது. அதன் மரபை பத்தி இயக்கம் (பத்தி = பக்தி) தோன்றிய காலத்துக்கும் முன்னரே, மணிமேகலையில் ஆபுத்திரன் கதையில் நன்கறியலாம். வைதீகத்திற்கும் அன்றெழுந்த சைவ,வைணவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. இன்று தமிழ்அரசர்களின் ஆதரவின்மையால் சைவம் திரிவுகளுக்குள்ளாகி கிடக்கிறது. வைணவமோ வடக்கு வைதீகத்தை உள்வாங்கியது போல காட்சியளிக்கிறது. ஆனாலும், இன்றைக்கும் சைவமும், வைணவமும் தனித்தியங்குவது காண்க. வைரமுத்தின் கட்டுரை ஆதிசைவத்தையும், தொல்காப்பிய மாலியத்தையும் அப்படியே வைதீகமாக்கி வரலாற்றை திரிக்கிறது. இது சைவ,வைணவத்தின்பால் அவருக்கிருக்கும் அறியாமையை காட்டுகிறதா? அல்லது காழ்ப்பை காட்டுகிறதா? என்று அறியமுற்படுவது தேவையில்லாத வேலை என்றாலும், முக்கியமான வரலாற்றுத்திரிப்பு ஒன்று கட்டுரையில் நிகழ்கிறது என்பதும் அது வைரமுத்து கவனமாக களமிறக்கிய பிழை என்பதும் தெளிவு. (குறிப்பு: வைணவம் = விண்ணவம் = மாலியம்)

4) ஆண்டாளை "கண்டெடுக்கப்பட்ட கனகம்" என்று புகழ்ந்து, அடுத்த வரியிலேயே ஆண்டாளின் பெற்றோரையும் குலத்தையும் தேடுவது அறிவர் மரபன்று. இதை பலரும் எடுத்துக்காட்டி வெகுண்டார்கள் என்றால் அதில் மனிதமும் தெய்வமும் கலந்து நின்றன என்றுதான் சொல்ல வேண்டும். "அறியாக்குலம்" என்பது எப்படி இரங்கற்குரியதாய் ஒரு நூற்றாண்டு முன்புகூட வழக்கில் இருந்தது என்று பேராசிரியர் மறைமலை எடுத்துரைத்து வருந்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

5)  "பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? " ------ வைரமுத்து.

வீட்டுப்பொருள், பூட்டுப்பொருள், பாட்டுப்பொருள் என்பதெல்லாம் வெறும் அடுக்குமொழிகளன்றி வேறில்லை. கவிஞரல்லவா? அழகாக எழுதியிருக்கிறார்; ஆயினும், இவர் சொல்லும் 8ஆம் நூற்றாண்டு ஆண்டாளுக்கு முந்திய நூற்றாண்டில்,
மங்கையர்க்கரசியாரும், மாதினியம்மையாரும் மிகப்புகழ்பெற்ற பணிகளை செய்துவிடுகிறார்கள். அப்பரடிகளின் அக்கையார் திலகவதியாரே, அப்பரடிகளை சமணத்திலிருந்து மீட்டு சைவக்குரவராக்கி வரலாற்றில் நிலைபெறுகிறார். மங்கையர்க்கரசியாரோ தனது கணவனான அரசனை அயற்சமணத்திலிருந்து மீட்டு தமிழ்ச்சிவமாக்கிய பாண்டிமாதேவி. இவர்களுக்கும் இரண்டு நூறாண்டுகள் முந்திப்பார்த்தால், காரைக்காலம்மையார் நாகநாட்டிலிருந்து காட்சி தருகிறார். பெண்கள் சம அளவில் பொதுக்களத்தில் இருந்தார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும், நான்கு நூற்றாண்டுகளிலேயே காரைக்காலம்மை, திலகவதியார், மங்கையர்க்கரசியார், ஆண்டாள் போன்று உயர்ந்த பெண்மணிகளை அப்போது காணமுடிகிறது. ஆனால், பிற்கால ஔவையாரைத்தவிர, ஆண்டாளுக்குப்பின், சிறந்த நிலைபெற்ற பெயரெடுத்தவர் என்று பார்த்தால் வீரமரபில் வேலுநாச்சியாரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. 400 ஆண்டுகளில் நான்கு பெண்மணிகளை பொதுக்களத்தில் உயர்ந்த இடத்தில் காணமுடிகிறது.1300 ஆண்டுகளில் இருவரை மட்டும் காணமுடிகிறது. அப்படியென்றால், இப்பொழுதைவிட அப்பொழுது பெண்களுக்கு சிறப்பானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆகையால் வீட்டு, பூட்டு, பாட்டு என்பதெல்லாம் எகனை மொகனை கூடிய முன்முடிவு. கோயில் விழாவில் தேவையில்லாதவற்றை பேசினால் இப்படித்தான் உறுதியற்ற செய்திகளில் போய்முடியும்.

6) "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" --- வைரமுத்து

சிவன்மேல் பத்திகொண்ட புனிதவதியாரை, "அம்மையே" என்று அன்னை உறவை வைத்து இறைவன் அழைத்ததால் அவர் அம்மை என்கிற காரைக்கால் அம்மை ஆனார். அதேபோன்று தமிழ்வரலாற்றில் முதற்பெரும் சிவபத்தியுடைய பெண்மணியாக காட்சியளிப்பவர் இராவணன் மனைவியான வண்டோதரி (மண்டோதரி என்பது திரிவு). உத்திரகோசமங்கையில் வந்து வணங்கிநின்றபோது, அவர் கையில் குழந்தையாய் தவழ்ந்த சிவனை போற்றிப்பாடுவார் மாணிக்கவாசகர். அப்பன் நீ, அம்மை நீ என்று எல்லாமே நீ என்று இறைவனை பாடிக்கொண்டே வரும் அப்பரடிகள், ஒப்புடைய மாதரும் நீ என்பார். ஒப்புடைய மாதர் என்றால் மனைவி என்று பொருள். "தவளே இவளெங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்" என்று சத்தியை பாடி, அடுத்த வரியிலேயே, "அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள்....." என்பார் அபிராமி பட்டர்.

சிவன் தன்னிடம் பத்திகாட்டிய ஒரு பெண்மணியை தனது அன்னையாக்கி கொள்கிறான். இன்னொரு பெண்ணுக்கு பிள்ளையாகிப்போகிறான்.
இன்னொரு பத்தருக்கு மனைவியும் இறைவனே என்ற பார்வையை தருகிறான். அப்படித்தான் திருமால் தன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளை தனக்கு இடப்புறத்திலே இறைவியாகவே வைத்துவிடுகிறார்.

இவை எல்லாமே கற்பனையாகவும் புனைவாகவுமே வைத்துக்கொண்டாலும், இதிலிருக்கிற பண்பாடும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நெருக்கமும் மிகச்சுவையானவை; இதமானவை.

ஓர் உயர்ந்த உறவை பேசவரும்போது இயல்பான வழக்கத்தில் பண்பாடு வாழ்கிறது. "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" என்று ஆண்டாளை வைரமுத்து குறிப்பிடும்போது பண்பாடு கரகரவென்று அறுக்கப்படுகிறது. யாராவது "என் தாய் என் தந்தைக்கு முந்தி விரித்தாள்" என்று பேசக்கேட்டிருக்கிறோமா? சாதாரண மாந்த வாழ்விலும் இருக்கும் பண்பாட்டை காற்றில் பறக்கவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து.

7) "திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்? கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?" --- வைரமுத்து

இதுதான் கட்டுரையில் மட்டமான இடம் என்றால் மிகையல்ல.

"பாலியல்" என்ற சொல்லே மிக அருவெறுப்பானது. மலிவான பார்வையில் வெளிவரும் சொற்களை விரித்து எழுதுவதே தவறு. வைரமுத்தின் பெரிய சொற்குற்றம் இது.

8) 19ஆம் பாட்டும் நாச்சியார் திருமொழியும்:

ஆண்டாளின் எம்பாவையும் (திருப்பாவை), மாணிக்கவாசகரின் எம்பாவையும் (திருவெம்பாவை) தன்மையில் ஒத்தவையாகும். இப்பாடல்களின் உட்பொருள், "ஒரு பக்குவம்பெற்ற ஆன்மா, இருளில் மாயையில் மூழ்கி உறங்கிக்கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவிற்கு இறைவனின் சிறப்பை சொல்லி, தட்டி எழுப்பி நம்பிக்கையளித்து,  ஆற்றுப்படுத்த விடுக்கின்ற அழைப்பும் வழிகாட்டலுமாகும்." (ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் ஓர் ஆன்மா மூழ்கிக்கிடக்கும் அவலத்தை இருபா இருபஃது விவரிக்கும்). அறிவான சிவத்தோடு இணைய சத்தியை அழைப்பதாக சிவநெறி சொல்லும். இங்கே விண்ணவத்தில் தன்னையே இறைவியாக விதித்துக்கொண்ட ஆண்டாள் பிறரை இறையை நோக்கிஅழைக்கின்றார்.

இறையை வழிபட, ஒன்றாகக்கூட அழைக்கின்ற அழைப்பினை சிவ, விண்ணவ நெறிகளில் மட்டுமல்ல, வேறு சமயநெறிகளிலும் இன்றைக்கும் காணலாம். ஒரு குறிப்பிட்ட சமயநெறியினர் பலரை எழுப்பி /அழைத்து ஒன்றுகூடாமல் வழிபாடே செய்வதில்லை. வழிபாட்டை, நோன்பை கூடிச்செய்யும் மரபு தமிழ்க்குமுகத்தின் ஆணிவேர். அந்த ஆணிவேரை வருணமும், சாதி ஏற்றத்தாழ்வும் பிடுங்கி எறிந்தன பின்னாளில். ஆண்டாளும், மாணிக்கவாசகரும் விடும் அழைப்புகள் (Prayer Calls) மிக உயர்ந்த நெறியினதாகும். வெறும் பெண்டிரை நோன்புக்கு அழைக்கும் பதிகங்களை இருவரும் இயற்றவில்லை. அந்த அழைப்பு வெறும் விளையாட்டல்ல. குமுகத்தை (குமுகம் = சமூகம் = Society) கட்டியமைக்க அவர்கள் பட்ட பாடு. பத்திமரபு என்பது பொதுமரபு என்று எனது முதல்மடலில் சொல்லியிருப்பதை ஒத்துக்காண்க.

எம்பாவை பாடி இறைவனைக்கூட பக்குவம் பெறவேண்டிய ஆன்மாக்களை அழைத்த மாணிக்கவாசகர், ஆத்மநாதராகவே ஆவுடையார் கோயிலில் வீற்றிருக்கிறார். அதே பணியை விண்ணவத்தில் செய்த ஆண்டாள் இறைவியாக ஆகி, வில்லிப்புத்தூரில் வீற்றிருக்கிறார்.

இருவருமே உருகி உருகி இறைவனை காதலித்தவர்கள். இருவருமே, இறைவனிடம் முழுச்சரணகதி அடைந்தவர்கள். மாணிக்கவாசகர் இறைவனை குருவாகக் கருதி ஐக்கியமானார். ஆண்டாள் கணவனாகவே இறைவனை வரித்துக்கொண்டார்.

திருப்பாவையின் அந்த 19ஆம் பாட்டு சொல்வது இதுதான்:

"உன் கழலடைய, உன்னோடு கலக்க உன்னை கணவனாகவே வரித்து தவமிருக்கும் எனக்கு அருள் செய்யாதிருப்பது, உன் அடியார்களையும் மறக்குமளவிற்கு, நப்பின்னை பிராட்டியார் உன்னிடம் காட்டும் அன்பிலும் காதலிலும் கரைந்து போனதனாலோ? இது சரியா?". இதுதான் அதன் பொருள். அதை பாலியல் கொச்சையாக பேசினால் எப்படி?

"கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே..." என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்வது மெய்யியலை பேசும்போது மிகவும் பொருந்தும். ஆண்டாளின் இலக்கியத்தை உணர கூர்த்த மெய்நோக்கு தேவை.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் படிக்கும் கண்கள், தங்கள் ஆராய்ச்சிகளை தாறுமாறாக அவிழ்த்துவிடுகின்றன. வைரமுத்தும் அதையே செய்திருக்கிறார். ஆண்டாளுக்கும் மாணிக்கவாசகருக்கும் இறைவனோடு கலக்க வேண்டும் என்ற ஒரே தவிப்புதான். அந்தத்தவிப்பை புரிந்து கொள்ள வேண்டியவர்கள், ஆண்டாளை பருவமடைந்த பெண்னாக பார்ப்பதுதான் அவர்களின் கோளாறு.
நாச்சியார் திருமொழியில் 5ஆம் பதிகத்தில் குயிலோடு பேசும் ஆண்டாளை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனின், மாணிக்கவாசகரின் குயிற்பத்தை படிக்கவேண்டும். இருவரும் குயிலை வைத்து பேசுகின்ற பேச்சு, கெஞ்சல், மிரட்டல் என்ற பலஉணர்வுகளும் ஆன்மவிடுதலைக்கு அவர்களின் தவிப்பை சொல்லும் பேரரும் பதிகங்களாகும்.

நாச்சியார் திருமொழியின் 13ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டில் ஆண்டாள் இப்படி பாடுவார்.

"கொம்மை முலைகள் இடர்தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவந்தானென்?
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே."

மானுடவாழ்வின் அல்லல்களில் இருந்து விட்டுவிடுதலையாகி முத்திபெற தவிக்கின்ற தவிப்புதான் ஆண்டாளின் தவம். இதையே, மாணிக்கவாசகர் எப்படிப்பாடுகிறார் பாருங்கள்!

"பொழிகின்ற துன்பப்புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்; யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர் திரைபொர காமச்சுறவு எறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே!"

காமம், வெகுளி, மயக்கம் போன்ற மானுட அல்லலில் இருந்து விடுபட தவமிருக்கும் மாணிக்கவாசகர், உன்னைப்பற்றி நின்ற அன்பர்கள் எல்லாம் வானேறிவிட, நான்மட்டும்
இங்கு சுறாமீன் போன்று தாக்குகின்ற காமத்தால் அழிந்துகொண்டிருக்கிறேனே என்று கதறுகிறார். இதைத்தான் ஆண்டாளும் "கொம்மை முலைகள் இடர்தீர" என்று குறிப்பிடுகிறார். இன்னொரு பாட்டில், "......என்னை கூவிடுவாய்! கும்பிக்கே இடுவாய்! நின் குறிப்பறியேன்" என்று அலறுவார்; இன்னொரு பாட்டில் "....நம்பி இனித்தான் நல்குதியே!' என்று அழுவார்.  அதைத்தான் ஆண்டாளும், "விடைதான் தருமேல் மிகநன்றே" என்று உருகுகிறார்.

ஆண்டாளை வெறும் தெய்வமாக புரிந்து கொண்டு போகின்ற போக்கில் கன்னத்தில் போட்டுக்கொள்பவர்கள்தான் பெரும்பான்மை. திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் மட்டும் படித்தவர்கள் கொஞ்சம் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மாணிக்கவாசகரின், அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, வாழாப்பத்து, ஆனந்தமாலை, நீத்தல்விண்ணப்பம் ஆகியவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்பேன். அதையும் சித்பவானந்தாவின் உரையோடு சுருக்கிக்கொள்ளக்கூடாது. அவ்வுரையை தாண்டி நல்ல உரைகள் உண்டு. இவற்றோடு குறுந்தொகையையும், திருக்குறளின் இன்பத்துப்பாலையும்  ஒப்பிட்டு படிக்க வேண்டும்.  அகப்பாடல்களை படிக்க வேண்டிய முறையே இதுதான்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்காணும் வாரணமாயிரம் என்ற பதிகத்தை போன்ற ஒப்பற்ற மங்கல பதிகத்தை நான் எங்கும் படித்ததில்லை. அதில் "தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது" என்கிறார் வைரமுத்து. திருப்பித்திருப்பி படிக்கிறேன் அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்றே புரியவில்லை.

ஒட்டுமொத்தமாக அதன் 14 பதிகங்களை பார்த்தால் நாச்சியார் திருமொழி என்பது ஆண்டவனின் கழல்சேர, ஒன்றிப்போக, இம்மையின் அல்லல் நீங்கி "சும்மா இருக்கும் சுகம்" என்பாரே வள்ளலார் அதனை அடைய ஆண்டாள் என்ற 13/14 வயது மங்கையின் பரிதவிப்பு, வேண்டல், தவம், அலறல், கதறல் ஆகியவைதான் அவை.

"பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்" என்று வள்ளுவம் சொல்லவில்லையா? அவர் சொன்ன அந்த பிறவிப்பெருங்கடலின் அல்லல்களில் இருந்து தம்மை விடுதலை செய்ய வேண்டி நின்ற ஞானந்தான் ஆண்டாளின் தவம்.

ஆனால், இலக்கிய வித்துவான்களும் காலஞ்சென்ற ஞாநி உள்ளிட்ட தயார்-எழுத்தாளர்களும் (fast food writers) எங்கெங்கெல்லாம் முலை, கொங்கை, அல்குல் என்ற சொற்கள் வருகிறது என்று பார்த்து அந்த வரியை மட்டும் பிடித்துக்கொண்டு காமம், கொடூரம், கொக்கோகம் என்றெல்லாம் கருத்தெழுதி கொச்சைப்படுத்திய நாள்கள் தமிழ் அறிவுலகத்தின் அவமானமான காலம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக ஞாநி 15 ஆண்டுக்கு முன்பு கண்ணகியை ஏளனப்படுத்தினார். பின்பு, மாணிக்க வாசகர்; அண்மையில் ஆண்டாளை கேலிசெய்தார்.

ஏன் இந்த எழுத்துலகிற்கும், அறிவுலகிற்கும் கொங்கை, முலை, அல்குல் என்ற மூன்று சொற்களை படித்தாலே கைகால் வியர்த்து நடுங்குகின்றன என்று எனக்கு புரியவில்லை.
இந்த முறை சற்று கூடுதலாகவே இதழ்களுக்கும் நடுங்கியிருக்கின்றன. இந்த நடுக்கம் தமிழ் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்த நடுக்கம் வந்தபின்னர்தான் மருத்துவரிடம் கூட, ஆங்கிலத்தில் அதற்கான பெயர்களை சொல்லும் வழக்கம் வந்திருக்கிறது.

இயல்பான இம்மைவாழ்வின் அல்லல்களை நீங்கி ஆண்டவனை அடையவேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளம்மையை வைரமுத்து பார்த்தது பார்வைப்பிழை; அறிவின் குறை; ஆண்-அவம், புலமைச்செருக்கு என்ற மாயை.

அன்றைய சூழலில் பெண்களுக்கு கொடுங்கோடு என்ற ஒன்றெல்லாம் தென்படவேயில்லை.

9) "பாலியல் சொல் விடுதலை" - இந்தச்சொற்கள் வைரமுத்தின் வக்கிரத்தின் உச்சம். அதுவும் ஔவையார், வெள்ளிவீதியாரையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு இதைப்பேசுவது அறியாமையா?ஆணவமா? என்பது புரியவில்லை. இன்னும் எழுத எவ்வளவோ இருந்தாலும் நீளம் கருதி, பத்தோடு நிறுத்துகிறேன்.

10) தேவதாசி:

தனது முன்முடிவை நேரடியாக கூறாமல், வேறொருவரை மேற்கோள் காட்டி ஆண்டாளை அப்படி குறிப்பிடுகிறார். எத்தனை பெரிய தவறென்று தமிழ்நாடு அவருக்கு எடுத்துக்காட்டியது. பலர் கூறியவற்றை தவிர்த்து இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அ) தேவதாசி மரபு அன்றைய சூழலில் உயர்வாக கருதப்பட்டது என்று சொன்னாலும், எத்தனை தேவதாசிகளை தமிழ்நாடு வணங்கிக்கொண்டிருக்கிறது? எண்ணிப்பார்க்க வேண்டாவா? இறைவியாகக்கூட இல்லை, பரிவார தேவதைகளாகவேனும் எத்தனை தேவதாசிகள் வழிபாடு பெறுகிறார்கள்? அப்படியென்றால் அன்றைய சூழலை இழுத்து குழப்புவது சமாளிப்புதானே?

ஆ) தேவதாசி யார்?: சமயநெறிகளுக்குட்பட்ட கோயில்கள், கோயில் மண்டிலங்களில் மானகை/மேலாண்மை (Management) இருக்கத்தானே செய்யும். தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு இருக்கிற மேலாண்மைக்கூறுகளை கோயில்களிலும் காணமுடியும். நிருவாகம் (Administration), அன்றாடப்பணிகள் (Operations), மனிதவளம் (HR), நிதி (Finance), விற்பனை/வணிகம் (Sales/Rental) போன்ற அடிப்படைத்துறைகளை இன்றைக்கும் பெரிய கோயில்களில் காணலாம்.

அதோடு, இந்தக்கோயிலுக்கு போய் வழிபட்டால் இன்ன குறை நீங்கும்; இன்னது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கேட்கிறோமே அதெல்லாம் கோயில்கள் சந்தைப்படுத்தப்பட்டதன் அடையாளங்கள். சூரிய பகவானை வழிபட இங்கே செல்க, சனிபகவானை வழிபட அங்கே செல்க, தலைவலி நீங்க இங்குமங்கும் செல்க என்றெல்லாம் இன்றும் நாம் நிறைய கேட்கிறோம். All these are nothing but Temple-Marketing-Network-Activities.  கோயில் புகழ்பெற செய்யப்பட்ட விளம்பர உத்திகளாகவே பெருமளவும் காட்சியளிக்கின்றன.

இதை ஏன் உறுதியாக சொல்கிறேன் என்று கேட்கலாம். திருநள்ளாறை எடுத்துக்கொள்வோம். அங்கே சனிபகவானை கும்பிட்டால் குறைகள் தீரும் என்பது நமது நம்பிக்கை. ஆனால், திருநள்ளாற்றின் பச்சைப்பதிகம் உள்ளிட்ட மூவர் பாடிய பாடல்களிலும் அப்படியொரு வழிபாட்டை தேவார முதலிகள் எழுதவேயில்லை.

மூவர் தேவாரமும் ஒவ்வொரு தலத்தின் இறைவனையும், அந்த ஊரின் இயற்கையையும் சிறப்பையும் பாடி, இந்தப்பாட்டை படி; போதும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆழ்வார்களிடையேயும் நான் அப்படித்தான் காண்கிறேன்.

ஆனால், நிகழ்வு என்ன என்றால் அவர்கள் பாடிய பாட்டை கோயில் நிருவாகமே பாடுவதில்லை. மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகளை வளர்த்துவிட்டு அதன்மூலம் வருமானத்தை அதிகரிக்கும் கார்ப்பரேட்டு உத்திகளைத்தான் கோயில்களில் காணமுடிகிறது.

அந்த சந்தை (Marketing) உத்திகளின் ஒருபகுதியாக கலைஞர்கள் தேவதாசியாக ஆக்கப்பட்டு Dedicated Event Performers ஆக ஆக்கப்பட்டார்கள். இது மனிதவள (HR) உத்தியாகவும் இருந்தது என்பதை சொல்லவேண்டியதில்லை. இந்த மனிதவளத்தின் மற்றொரு பகுதியாக Operations - அதாவது அன்றாடப்பணிகளுக்கு தேவைப்பட்ட ஆள்களை சொல்லலாம். வேலைகள் செய்ய தேவைப்பட்ட ஆள்களாகவும்(Labours) தேவதாசிகள் தேவைப்பட்டிருக்கின்றனர்.

ஆக, தேவதாசிகள் கலைஞர்கள் ஒருவகையாகவும், பணியாள்கள் ஒருவகையாகவும் இருந்திருக்கிறார்கள். (There existed both artists and labours as devadasis. As always marketing people are paid high in the industry it is possible the artist-devdasis could have been kept in better esteem/wealth) இப்படியிருக்கையில், இறைப்பணி என்று ஒரெ முத்திரையிட்டு தேவதாசிகளை பேசுவது சரியாயிருக்காது.

இதில், ஆண்டாளை ஏப்படி தேவதாசி என்று கூறமுடியும்? மாபெரும் பிழையல்லவா? கடுஞ்சினம் வருமா இல்லையா?

Temple Marketing என்பதைப்பற்றி இறுதியாக ஒரு குறிப்பை அனைவரின் சிந்தனைக்கு எழுதி நிறைவு செய்கிறேன்.

நேர்த்திக்கடன், வேண்டிக்கொள்வது, நோன்பு/விரதம் போன்றவை தொன்மமான நாட்டார் மரபுகளிலேயே உண்டு. முருக மரபில் உண்டு. ஆனால், எங்காவது, சின்ன கருப்பு கோயிலுக்கு போனால் சுக்கிர தோசம் போகும், சுடலை மாடன் கோயிலுக்கு போனால் செவ்வாய் தோசம் போகும் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லை.

இடைக்காலத்தில் எழுந்த பத்தி இயக்கமும் அப்படி சொல்லவே இல்லை. சொல்லப்போனால், வழிபாட்டை மிக எளிமையாக்கியது. "சும்மா இந்த பதிகத்தை படித்துவிட்டு போப்பா" என்று படிக்கச்சொல்லியது. சான்றாக தேவாரத்தை சொல்வேன்.

ஆனால் பிற்காலந்தான் அப்படியான வழக்கங்களை உருவாக்கின. குறிப்பாக, நாயக்கர் காலத்திற்குப்பின்னர், தமிழ் கோயில்களை விட்டு அதிகம் வெளியாகி, இந்த வழக்கங்கள் உருவாகின.

இது தேவையா தேவையில்லையா என்பதெல்லாம் அவரவர் விருப்பு. ஆனால், Temple Marketing என்பது எல்லை மீறிப்போவது கவனிக்கத்தக்கது. இதை ஆழ்ந்து பார்க்காமல், எல்லா மரபு வழிபாடுகளையும் தூற்றிக்கொண்டு, ஆன்மீகம் தொடர்பான அனைத்தையும் கேலி பேசிக்கொண்டே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம்?
படிக்கச்சொல்லி நமக்குத்தந்த தூயதமிழ் இறைப்பாடல்களை படிக்க மறுத்து, ஆரியம் பூரியம் என்று தேவாரம் திருவாசகம் போன்றவைகளையும் தள்ளிவைத்துவிட்டு, காது, ஈயம் கதைகளை எத்தனை நாள் பேசிக்கொண்டிருப்போம்?

எனது முந்தைய மடலில் சுட்டிக்காட்டிய மரபின் திரிவுகளை ஒத்துப்பார்க்க வேண்டுகிறேன்.

வைரமுத்தின் அறமற்ற பத்துப்பிழைகளோடு நிறுத்திக்கொள்கிறேன்.
வேறுபிற செய்திகளோடு அடுத்த மடலில் நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
30/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/2.html


Sunday, January 21, 2018

ஆண்டாள் - மடல் 2: மரபின் திரிவும் திரிவின் விளைவும்.


மால் நெறியினரின் நாலாயிரத்தின் தொகுப்பிற்கும், சிவநெறியினரின் தேவாரத்தொகுப்பிற்கும் ஒரு வேறுபாடு உண்டு.

தேவாரம், அதன் முதலிகள் யாத்தவாறே, தலவரிசையாக அல்லது பண்/யாப்பு வரிசையாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். முதலியின் வரலாற்றை, சிறப்புகளை சுருக்கமாக நூன்முகப்பு தாங்கியிருப்பதை காணமுடியும். சில பதிப்புகளில் முதலிகளை போற்றியோ, அல்லது சைவத்தை போற்றியோ ஓரிரு பாடல்கள் தமிழில் இருக்கும். ஆனால், நாலாயிர நூல்களை காணும்போது, தமிழிலும் சமற்கிருதத்திலும் யாக்கப்பட்ட பாடல்கள் சிலவற்றை தனியன்களாக ஆழ்வார்களின் பாடல்களுக்கு முன்னர் வைத்திருப்பர். தனியன்கள் என்பன, பாயிரம் போன்றவை என்று சொல்லத்தக்கன. பாடல்களை யாத்தவரையோ பாடல்களின் பயனையோ பாராட்டி அந்த தனியன்கள் எழுதப்பட்டிருக்கும்.

ஆழ்வார்கள் எழுதிய செந்தமிழ்களை, முதன்முதலில் சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தனியன்கள் அணிந்துரைக்கும். அதாவது முதலில் வடமரபோடு இணைக்கப்படும். பின்னர் தமிழ்த்தனியன்கள் வியந்து போற்றும்.

சிவன்கோயிலில், இறைவனின் பெயர், ஏறத்தாழ முழுமையாக சமற்கிருதத்தில் திரிக்கப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.  மூவர் முதலிகளின் பதிகங்களை படிக்கும்போது அதில் குறிப்பிட்டிருக்கும் இறைவனின் தமிழ்ப்பெயருக்கும், பாடப்பட்ட  கோயிலின் இறைவனின் தற்போதைய சமற்கிருதப்பெயருக்கும் எந்தத்தொடர்பும் இருக்காது. காட்டாக, ஆனைக்கா அண்ணல் என்று சம்பந்தரின் பதிகம் இசைக்கும். ஆனால், சம்புகேசுரர் என்பது வழக்கில் இருக்கும். பதிகத்தின் தமிழ்மரபுக்கும் இன்றைய வழக்கிற்கும் தொடர்பறுவது காண்க. திரிபின் விளைவு இப்படித்தான் இருக்கும். சிவப்பதிகத்திற்கும் தலத்திற்குமே தொடர்பு நீங்கிவிடுகிறதென்றால், அவற்றை ஆக்கிய அந்த செந்தமிழ்மரபை, செந்தமிழ் முதலிகளை எப்படி பேணியவர்களாவோம்? அதுபோலவே மாலவன் கோயில்களிலும், குறிப்பாக திவ்விய தேசம் என்று சொல்லப்படும் கோயில்களில் பலவற்றில் இறைவன் - இறைவி பெயர்கள் அமுதம் போன்ற தமிழ்ப்பெயர்களில் இருந்தாலும், பலவற்றில் பிறமொழிப்பெயர்களில் இருப்பதை காணமுடியும்.

"இந்தத்திரிவுகள் ஏற்பட்டது எந்த நாளோ அந்த நாளிலிருந்தே செந்தமிழ் முதலிகளான தேவாரத்தை தந்த நாயன்மார்களுக்கும், நாலாயிரத்தை தந்த ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கும் இம்மண்ணில் புறக்கணிப்பு தொடங்கிவிட்டது."

வரலாற்றின் முக்கிய மைற்கல்லான அந்த 7, 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மரபின் திரிவே இல்லையா என்று சிலர் கேட்கலாம். இருந்திருக்கின்றன; ஆனால், அந்த இரு நூற்றாண்டில் மறுமலர்ந்த தமிழின் அளவு கடல்போன்றது. அந்தத்தமிழ் ஆட்சியரசிலையே திருப்பிப்போட்டது. அதற்குப்பின் அப்படியொரு செந்தமிழ் மலர்ச்சியை இன்றுவரை தமிழகம் காணவில்லை. ஆகவே, அப்படியான மலர்ச்சி, பெரிய அளவில் சிதைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் போனதை அளவீடாக கொள்தல் எளிதும் தேவையுமாகும்.

தேவாரத்தில் ஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்திகளும், ஆழ்வார்களில் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் உள்ளிட்ட பல ஆழ்வார்களும், தமது பதிகத்தை முடித்து, கடைசிப்பாட்டில் (கடைக்காப்பு) தமது செந்தமிழை இறைவர்க்கு படைத்ததால் வந்த பெருமிதத்தோடு, "இந்த பத்துத்தமிழ்களை படித்தாயென்றால் நீ நல்லாயிருப்பப்பா" என்று ஆணையிட்டும், அன்போடும் அருளிய அந்த அழகை படிக்கும் ஒவ்வொருவரும் கிறங்கிப்போவது இயல்பு. தமிழில் கரைந்து போவதும் இயல்பு.

"....வேயர் புகழ் வில்லிபுத்தூர்மன் 
விட்டுசித்தன் சொன்னமாலை பத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்கு ஆளர் தாமே"..... பெரியாழ்வார்

"நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவனுறை திருவெண்காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு  அருவினை அறுதல் ஆணையே"...... ஞானசம்பந்தர்

இன்றைக்கெல்லாம், "தமிழில் பேசுவது அவமானமல்ல - அடையாளம்" என்று பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கையில், தமிழை பெருமிதத்தோடு அன்று ஓதி, அனைவரும் ஓதத்தந்த தமிழ் ஞானமரபுதான் நாயன்மார்களும் ஆழ்வார்களும். அத்தகைய தமிழ்மரபு வீரமரபுமாகும். தமிழை பெருமிதத்தோடு மக்களிடையே மறுமலர்ச்சி செய்த அந்த மரபு சிதைக்கப்பட்டு, கோயிலில் இருந்தும் தள்ளி வைக்கப்பட்டது.

மாலவன் கோயில்களிலேனும் சிறிது தமிழுக்கு இடமுண்டு. தாயார் கோயிலிலும், மாலவன் கோயிலிலும் ஒருசில பிரபந்தப்பாடல்களையாவது சன்னதியில் பாடுவோர் உண்டு. ஆனால், சிவன் கோயில்களிலும், புகழ்பெற்ற முருகன் கோயில்களிலும், சன்னதியில் முழுமையாக தமிழ்  புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை, என்று சொல்லும் அளவிற்கு அவமானப்படுத்தப்படுகிறது.

மாணிக்கவாசகர் இயற்றியிருந்தாலும், தில்லை நடராசரே தன்கைப்பட எழுதியதுதான் திருவாசகம் என்று புகழப்படும் திருவாசகத்தையும் தேவாரத்தையும் தில்லை சிற்றம்பலத்தில் பாடமுடியாது. நடராசருக்கு 20-25 அடி தொலைவில் பள்ளத்தில் நின்றுதான் பாடமுடியும்.

பிற்காலத்தில் தோன்றிய சத்தி இலக்கியத்தில் தலைசிறந்தது அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி. அந்தப்பாடல்களை அண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் பாடமுடியாது. காலபூசையை வடமொழியில் 20 நிமிடங்கள் செய்துவிட்டு, கடைசியாக "தனந்தரும் கல்விதரும்..." என்ற அந்த ஒரு பாடலை மட்டும் சன்னதியை விட்டு வெளியே வந்து, தனது தலையை சுவற்றில் வைத்து மறைத்துக்கொண்டு ஒரு சிவாச்சாரியார் பாடுவார்; அல்ல அந்த தமிழ் சிவாச்சாரியாரை பாட வெளியே அனுப்புவார்கள். பாடுபவர் தமிழ் சிவாச்சாரியார் என்பது நன்றாகத்தெரியும். ஆனால் அவரை வெளியே விரட்டி பாடச்சொல்கிற அதிகாரம் எது? என்பதை இதுவரை யாரும் அறியமுற்பட்டதில்லை.

தமிழ்க்கடவுள் முருகன் என்று வானளாவ புகழும் தமிழ்நாட்டில், (சிவனும் மாலும் எங்கோ ஆர்க்கிடிக்கில் இருந்து வந்தவர்கள் என்று சிலர் பிதற்றுவர். அப்பிதற்றலை விடுக), அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் வைகறை பூசை நடக்கிறது;  வடமறை ஓதும் வேதவிற்பன்னர்கள் சுமார் 10 பேர் நின்று ஓதுகிறார்கள். 15-20 நிமிடம் கழித்து வெளிப்புறத்தை நோக்கி கைகாட்டுகிறார்கள். வெளியே எனக்கு இடப்புறம் முருகனின் மேல் பார்வை பட்டுவிடாமல் ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்த ஓதுவார் திடீரென பாடுகிறார் -  "ஆடும் பரிவேல் அணிசேவலென...." . ஒரு நிமிடம் அவர் பாடி முடிப்பதற்காக உள்ளே சன்னதியில் பூசை காத்துக்கொண்டிருக்கவில்லை.

(தில்லையிலும் அண்ணாமலையிலும் நான் சொன்னது உண்மைதானா என்று அறிய விரும்புபவர்கள் அங்கு உச்சிகால பூசைக்கு போய்வருக. செந்தூர் பற்றியறிய வைகறையில் செல்க.)

இதுபோன்ற காட்சிகளை திருக்கழுக்குன்றத்திலும் வேறு இடங்களிலும் நேரடியாக பார்த்து மனம் குமுறியவன் நான். அதன் வலியை யாரறிவார்? ஞானசம்பந்தர் தொடங்கி பாம்பன் சுவாமிகள் வரை 1300 ஆண்டுகளில் யாக்கப்பட்ட பல்லாயிரந்தமிழும் சன்னதிக்கல்ல - வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் மட்டும்தான் என்று எண்ணும்போது வருகின்ற வலியை துடைப்பவர் இங்கு யார்? கச்சேரியில் கூட இம்மி, சல்லி, தம்பிடி என்ற அளவே தமிழிசை இருக்கின்றன என்ற உண்மையை அறியாதவர் உளரோ? எம்.எசு.சுப்புலட்சுமி, உன்னிகிருட்டிணன், நித்தியசிரீ, இளையராசா போன்றவர்கள் ஒன்றிரண்டு பாடுவதற்கு மட்டும்தான், தமிழ் ஞானமரபு, பாடல்களை படைத்ததா?

சன்னதியில் எது பாடப்படுகிறது என்பதைவிட, எது புறக்கணிக்கப்படுகிறது, எது அவமானப்படுகிறது என்று புரிந்து கொள்ள முயலுகையில், எத்தனை பேருக்கு வலிக்கிறதோ அத்தனை பேரால் மட்டுமே இந்தத்திரிவில் இருந்து தமிழ்மரபை மீட்கமுடியும்.

எனக்கு வலிக்கின்றது.

தமிழர்களின் மெய்யியல் என்பது முன்னோர் வழிபாடு மட்டுமே என்றும், குலதெய்வ, ஊர்த்தெய்வ வழிபாடுகள் என்ற எல்லாமே அவ்வழி மட்டுமே என்று சொல்பவர்கள், அக்கோயில்களில் தமிழ் வழிபாட்டையும் வழிபாட்டு முறையையும் வைத்திருக்கின்றனரா? எங்கோ ஒன்றுமிரண்டுமாக நான் படித்த நினைவுண்டு. மற்றபடி எல்லாமே மௌனமாக மணியடிப்பது மட்டும்தான்.

கருப்பண்ணசாமி என்ற தமிழ்த்தெய்வம் பெரிய, சிறிய என்பதுபோன்ற முன்னொட்டுகள், பின்னொட்டுகளோடு கூடிய மெல்லிய வேறுபாட்டில்  குத்துமதிப்பாக 400க்கும் மேற்பட்டு இருக்கின்றன. அத்தனை சாமிக்கும் ஏதும் தமிழ் வழிபாடு, வழிபாட்டு முறை இருக்கின்றனவா? ஆனால், கடந்த சில வருடங்களில் இத்தனை சாமிக்கும் சமற்கிருத வழிபாட்டு முறை உருவாக்கப்பட்டு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுவும் கண்ணுக்கு முன்னால் நடக்கும் மரபின் திரிவு.

"முதலிலே, தமிழ் மெய்யியல் மரபு தமிழை மீட்டெடுத்த அந்த 7,8ஆம் நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சி சிதைக்கப்பட்டு தமிழ் திரிந்தது. அடுத்ததாக கோயில்களில் இறைவன் பெயர்கள் திரிந்தன. பின்னர் இறைவன் சன்னதியில் இருந்து தமிழ் துரத்தப்பட்டது. மெய்யியலின் பெருநெறிகளைத்தொடர்ந்து, குலதெய்வ அல்லது குலநெறியும் இன்று திரிவுறுகிறது." 

இன்னார் மட்டுமே திரித்தார் என்று ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே எத்தனை நாளைக்கு பேசிக்கொண்டிருப்போம்? அப்படியே என்றாலும், இன்னாரைத்தவிர மற்ற எல்லாரும் அதிலிருந்து தமிழை மீட்டார்கள் என்ற  செய்தியை தர தமிழ்நாட்டில் ஒரு கட்சியும் இல்லை இன்றைய அளவில். பேசிக்கொண்டே இருப்பது சரியா அல்லது செயற்படுவது சரியா?

சரியாக சொல்ல முற்பட்டால், 800 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் தமிழரசு இல்லை என்பதும், கடந்த 50-60 ஆண்டு அரசியலுக்கு தமிழர் மெய்யியல் இலக்கியங்களின் மேல் சிறிதும் அக்கறை இல்லை என்பதும், தமிழர் அதை விடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே நாத்திக மெய்மரபு பேசுகிறது.

இந்த நிலையில், ஆண்டாள் மீது வைரமுத்து தொடுத்த வருணனை என்பது மரபுத்திரிவின் மற்றொரு கோடி. இதனை தமிழ் ஆராய்ச்சி மரபு என்றெல்லாம் சொல்வது இட்டுக்கட்டி பேசுவது ஆகும்.

தமிழகத்தின் நாத்திக மெய்மரபும் தொன்மையானதே. ஆனால், இன்றைய காலத்தைப்போல அது அரசியலில் ஆட்சி செலுத்திய காட்சிகளை வரலாற்றில் காணமுடியவில்லை.

மேலும், கடவுள் மறுப்பு என்று வரும்போது, தமிழர்களின் சில வகுப்பாரை மட்டும் ஒடுக்கிவைத்ததால், அவர்களால் பேசப்பட்ட நாத்திகத்தை, பிறர் பேசும் நாத்திகத்தோடு சம அளவில் வைத்துப்பேசுவதே படுபாவம். ஒடுக்கப்பட்டவர்கள் பேசிய நாத்திகம், அடிவாங்கின வலியில் வந்த ஓலம்; ஆனால் பிறவகுப்பார் பேசிய நாத்திகம் அப்படியில்லை; அதை சொல்லால் குறித்தால் நன்றாக இருக்காது. மாறாக, ஒரு ஒப்பீட்டில் கோடிட்டு காட்டுவது சரியாக இருக்கும்.

"கடவுளாவது ஒன்னாவது! - வெட்டுடா அவனை" என்று சொல்லும் வெட்டுநரின் கடவுள் மறுப்புக்கும், "கடவுள் இருந்திருந்தால் என்னை காப்பாற்றியிருப்பான்" - என்று வெட்டுப்பட்டு கையறு நிலையில் அழுபவன் பேசும் கடவுள் மறுப்புக்கும் இருக்கின்ற வேறுபாடுதான் அந்த நாத்திக வேறுபாடு. இவ்வேறுபாடு இன்றும் வாட்டுகிற சூழல், தமிழும் மரபும் பெருமளவு திரிந்திருக்கிற சூழல் என்று சொல்ல வேண்டியதில்லை.

63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் தில்லையில் கோயிலுக்குள் புக முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வாசலில் கொளுத்தப்பட்டார் என்பது வரலாறு சொல்லும் உண்மை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், திரைப்படங்களும் எழுத்தாளர்களும் காட்டுவது போல, நந்தனார் ஒன்றுமறியா ஏமாளியாகவோ, கோழையாகவோ  இருந்தவரல்ல. அதற்கு தீண்டாமை காரணமல்ல. தமிழ்மரபு சிதைக்கப்பட்ட போது, தமிழ் மறுக்கப்பட்டபோது, பிறமரபுகள் தமிழ்க்கோயிலை கைப்பற்றியபோது கிளர்ந்தெழுந்து தில்லையை மீட்க போராடிய போராளி அவர். அவரைப்பிடித்து கொளுத்திவிட்ட போதும், தீயினால் உடல் வேகின்ற அப்போதும் எதிரிகளை மீறி கோயிலுக்குள் ஓடி சன்னதியின் முன்பு விழுந்து வெற்றியோடு உயிர்நீத்த மாபெரும் தமிழ்ப்போராளிதான் நந்தனார். பெரியபுராணத்தில் சேக்கிழாரின் திருநாளைப்போவார் புராணத்தை கூர்ந்து படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

அதற்கு சுமார் 1 நூற்றாண்டு முன்பு, இந்தக்கிளர்வுக்கு வித்தான ஞானசம்பந்தர் தனது 16 வயதுக்குள் அவர் யாத்த செந்தமிழ்ப்பாடல்களில், சுமார் 4200 இன்றைக்கும் தேவாரமாய் நிலைத்திருக்கின்றன. (16000 பாடல்களை யாத்தார் என்று சொல்லும் நூற்குறிப்புகள் உண்டு). அவரும் அப்பரடிகளும் உருவாக்கிய தமிழ் மலர்ச்சி, கிளர்ச்சியாய் பல்லவ பாண்டிய பேரரசுகளை தமிழ்வழிக்கு திருப்பியது. அப்பேர்ப்பட்ட சம்பந்தருக்கும், அரசினரொடு மக்களின் ஆதரவை பெற்றிருந்த அந்த மாபெரும் அந்தண அடிகளாருக்கும் நந்தனாருக்கு ஏற்பட்ட அதே முடிவுதான் ஏற்பட்டது.  இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளை தேடவிரும்புவோர், கருவூர்த்தேவர் எப்படி முத்தியடைந்தார் என்று தேடுதலும் அவசியம். அந்தணரான ஞானசம்பந்தரும், இன்று ஒடுக்கப்பட்டிருக்கும் குலத்தை சேர்ந்த அன்றைய நந்தனாரும் ஒரே காரணத்திற்காக, தமிழிற்காக போராடினார்கள் என்பது உண்மைதானே? ஒரே மாதிரியான முடிவைத்தான் அவர்கள் அடைந்தார்கள். இவர்களின் முடிவுக்கு புறமரபுதான் காரணம். ஒருவரின் மறைவை துயரமானதாக இன்று பேசுகையில், இன்னொன்றை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தமிழ்மரபின் சிதைவுதானே? திரிவுதானே?

மேலும், 13 நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் மெய்யியல் மரபு கிளர்ந்தெழுந்தபோதே இப்பெரிய வன்முறைகளை தமிழுக்கெதிரானவர்கள், தமிழ்மரபை வளரவிடாமல் தடுத்த புறமரபினர் செய்தார்கள் என்பதையும், இன்றைக்கு தமிழ்மரபு விழிப்படையும் நிலையில், மிகக்கொடூரமாக நாக்கை வெட்டுவேன், கழுத்தை வெட்டுவேன் என்று வெறியோடு எழுந்து இந்தித்துவ மரபை இந்துமரபாக கட்டியமைக்க துடிக்கிறார்கள் என்பதும் ஒப்புநோக்கத்தக்கனதானே? 

தமிழகத்தின் நாத்திக மெய்மரபு 1949ல் திராவிட அரசியலாக மாறியபின்னர், அது பெரிய உளவியல் முரணை ஏற்படுத்தியது. பொதுக்களத்திற்கு வந்தால் கோயில், இறை ஆகியவற்றின்பால் எள்ளலை உருவாக்கிவிட்டது. அது ஒரு வித கூச்சத்தை புழக்கத்தில்  விட்டது. இந்த எள்ளல் உளவியலில் உருவானதுதான் வைரமுத்தின் கட்டுரை. தமிழக அரசியலால் தமிழர்களின் மெய்யியல் தேவைகளை நிறைவாக செய்யமுடியாததற்கு இதுவே காரணம்.

"ஒருபுறம், வடமரபு இந்தித்துவ அரசியல் செய்யும் நா.க.மூ.க (நா.க.மூ.க = நாக்கு  மூக்கு கழுத்துவெட்டி கட்சி) தான் வெறுக்கும் தமிழுக்கு, தானழித்த தமிழுக்கு உரிமையாளர்கள் போல நடித்து வாளை சுழற்றும் சூழலுக்கும், மறுபுறம் அவர்களை எதிர்ப்பதுபோல எதிர்த்து, தமிழில் உள்ள எல்லா மெய்ஞான இலக்கியங்களையும் ஆரியம் என்று சொல்லி அவர்களிடமே தூக்கித்தரும் திராவிட அரசியலுக்கும் இடையே கிடந்து தமிழின் எல்லாமே நொறுங்கி நாசமாகிப்போகின்றன" என்ற புரிதலை, அந்த ஆண்டாள் தமிழர்களுக்கு தந்திருக்கிறாள் இப்போது என்பது புன்னைகையோடு வரவேற்கத்தக்கது.

எல்லாம் நொறுங்குதல் என்றால் என்ன? மெய்யியல் மரபு, சமஉரிமை, தன்மானம், தமிழ் மொழி, தமிழர் ஒற்றுமை, பெருமிதம், இன உணர்வு என்ற எல்லாமே இன்று சிதைந்தும் திரிந்தும்தானே போயிருக்கின்றன? ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முட்டுக்கொடுத்து எத்தனை நாள் வாழ்ந்துவிடமுடியும்?

இந்தித்துவத்திற்கு எதிர்ப்பு தமிழ்த்துவத்தில் இருந்துதான் பிறக்கமுடியுமே தவிர, நாத்திகத்துவத்தில் பிறக்கமுடியவில்லை என்று உணர்த்தியதுதான் ஆண்டாள் காட்டிய தெளிவு. தமிழ்த்துவமே நாத்திகந்தான் என்று காட்டமுனைந்து இழந்துபோவதைவிட, தமிழ்த்துவத்தை அனைத்து துறைகளிலும் மீட்டெடுக்கும் அரசியல்தான் சரியான ஆயுதமாக இருக்கும்.

தொன்மமான நாத்தீக கோட்பாடுகளும் இயக்கங்களாக செயல்படுவதில் பிரச்சினையேயில்லை. அதில் பலனிருந்தால் அது குமுகத்தை சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், எப்படி "ஆன்மீக அரசியல்" என்ற ஒன்று ஆபத்தானதாக கருதப்படுகிறதோ, அதேபோல முழுமையான "நாத்தீக அரசியல்" என்ற ஒன்றும் தமிழ்க்குமுகத்துக்கு ஆபத்தானதுதான். இரண்டுமே சமகேடுடையவை என்பதை எடுத்துக்காட்டத்தான் வைரமுத்து அந்தக்கட்டுரையை எழுதினார் போலும்!?

அந்தக்கட்டுரை தமிழர் அரசியலுக்கு பொருந்தாத இரண்டு முரணரசியலின் போதாமையை வெளிக்கொணர்ந்திருக்கிறது. உள்ளே கிடந்து தவிக்கும் பெரிய தமிழ்க்குடியின் இயலாமையையும்  வெளிக்கொணர்ந்திருக்கிறது.

வைரமுத்தின் அந்த முரண்பாட்டு எழுத்துகளையும், அந்தத்திரிவின் கோணங்களையும், அவரின் கட்டுரைப்பிழைகளையும் அடுத்த மடலில் அமைதியாக ஆயமுடியும் என்ற நம்பிக்கையில் இம்மடல் இதற்கு முந்தியகால திரிவுகளையும் திரிவுகளின் விளைவுகளையும் பார்வைக்கும் நினைவுக்கும் வைக்க முனைந்திருக்கிறது.

மேலும், "அன்றைய காலச்சூழல்" என்று சொல்லாட்சி நிரம்பி வழியும் இந்த வேளையில் நான் அன்றைய காலச்சூழலையும் தொடர்ச்சியையும் சற்று தொட்டுக்காட்டவேண்டியது கடமையல்லவா?

(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
21/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/1.html

Monday, January 15, 2018

ஆண்டாள் - மடல் 1




ஆண்டாள் மகாகவி. இப்படித்தான் மின்னம்பலம்.காம்-ல் ஒரு பெண்கவிஞர் தனது கட்டுரையில் ஆண்டாளை அறிமுகப்படுத்துகிறார் ( https://minnambalam.com/k/2018/01/13/28 ). அப்படியே நான் தொடங்குவதுதான் சரியானது என்றெண்ணி தொடங்குகிறேன்.

சுமார் பதின்மூன்று நூற்றாண்டுகளாக, "தமிழிலக்கியங்களில் தனக்கென ஒரு மாதத்தையே ஒதுக்கிக்கொள்கிற இலக்கியத்தை படைத்து நிலைத்த கோதைநாச்சியாரை மாகவி என்று சொல்வது அவரின் சிறப்புகளில் தலையாய சிறப்பு". இவரைப்போல ஒரு மாதத்தை தனக்கு சொந்தமாக்கிக்கொண்ட கவிஞரைத்தேடினால் மாணிக்கவாசகரை மட்டுமே சொல்ல முடியும். சமயம், ஆன்மீகம், இறைவடிவம் என்ற இவற்றைத்தாண்டி பண்ணிசைக்கவிஞர் என்ற மாவடிவம், ஆண்டாளுக்கு இருக்கிறதென்பதை எந்தக்கவிஞர்தான் மறுப்பார்?

கலைமாமணி, கவிமாமணி, சாகித்திய அகாதமி போன்ற விருதுகளை அறிந்திராத மாகவி பாரதியார் வாழ்ந்த நூற்றாண்டில், பாவேந்தர் பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் உள்ளிட்ட கவிச்செல்வங்கள் வாழ்ந்த நூற்றாண்டில், அதைத்தொடரும் காலங்களில், தோன்றிய தோன்றுகின்ற கவிஞர்களில் எத்தனை கவிஞர்கள் வரலாற்றில் நிலைபெறுவார்கள் என்பதை இன்று தீர்மானித்துவிட முடியாது.

அதற்கான காலம் சில நூற்றாண்டுகளேனும் வேண்டும் என்பதையும், திருப்பாவை தேவாரம் போன்ற பண்ணார்ந்த தமிழிசைப்பாடல்களை யாத்து வரலாற்றில் நிலைத்துப்போன கவிஞர்களை வருணிப்பதற்கு, இன்றைய அளவில், தமிழகப்பெருங்கவி, அல்லது வம்சத்து பெருங்கவி என்று ஓங்கிச்சொல்லப்படுவது மட்டுமே தகைமையை தந்துவிடுவதில்லை.

அதேபோல, ஆண்டாளின் படைப்புகளை ஆராய்ச்சி செய்பவர்கள், தற்கால பரபரப்புகளையே வாய்ப்பாகக்கொண்டு, ஆண்டாளுக்கு பருவ-உணர்வை உருவாக்கிந்தந்து, அதையே குறிக்கோளாய்க்கொண்டு ஆராய்ச்சி செய்வதையும், மிகச்சில வரிகளை மேற்கோள் காட்டி ஒரு முடிவை எடுப்பதையும் ஏற்றுக்கொண்டுவிட முடியாது. எடுத்துக்காட்டாக, https://maharasan.blogspot.in/2018/01/blog-post.html என்ற இந்தப்பதிவில் இருக்கும் சில கருத்துகளை சொல்லலாம்.

திருப்பாவையின் முதற்பாடலிலேயே, "சிறுமீர்காள்" என்று பெண்பிள்ளைகளை கூவி அழைக்கின்ற ஆண்டாள் என்ற சிறுமி, இறைவனோடு கலந்தபோது அவளுக்கு அகவை பதினைந்துதான்.

ஒரு 15 வயது சிறுமியின் ஞானவாழ்க்கையை, ஞானஉலகை புரிந்து கொள்வதில் ஏன் இன்றைய படிப்புலகிற்கு இத்தனை பெரிய தடுமாற்றம் என்று புரியவில்லை.

*யாரோ மண்டபத்தில் உட்கார்ந்து எழுதி* கோதையின் பேரை போட்டுவிட்டார்கள் என்று இராசாசியே சொன்னாலும், 3 வயதில் சிவனை பித்தன் என்று பாடிய அந்த ஞானக்குழந்தையின் நிழலில் அமர்ந்து கொன்டு அது பாடியதையே திரும்பப்பாடும் சிவநெறியாளரும் இராசாசியை ஒப்புக்கொள்ள மாட்டார். ஞானசம்பந்தரும் ஆண்டாளும் இம்மண்ணின் ஞானமரபின் வலிமையை சொல்லும் இலக்கணங்கள், குறியீடுகள்.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் ஆண்டாள் எழுதியபோது அவருக்கு 10 வயதா, 12 வயதா அல்லது 14, 15-ஆ என்று தெரியவில்லை. ஆனால், முற்போக்குகள், அந்தச்சிறுமியை, பாலியல் உணர்வுகளை மரபைத்தாண்டி வெளிக்காட்டி தன் உணர்வுகளுக்கு விடுதலை அளித்த புரட்சிக்காரியாக சித்திரிப்பதையும், நாச்சியார் திருமொழியை கொக்கோக நூலென்று சொல்வதையும், அந்தக்கால ஆணாதிக்கத்தை, பெண்ணுக்கெதிரான கட்டுப்பாடுடைகளை, தனது காம உணர்வுகளை எழுத்தில் பதித்ததன் மூலம், கட்டறுத்த, மீறிய பெண்ணியவாதி என்றெல்லாம் சொல்வதையும் எண்ணிப்பார்த்தால், அதிகமாக தலை சுற்றுகிறது; தலை என்றவொன்று ஏனிருக்கிறது என்று கூட தோன்றுகிறது.

கோதையை எண்ணும்போது, சீருடை அணிந்து பத்தாம் வகுப்பு படிக்க, பள்ளிக்கூடம் போகிற பிள்ளையொன்று நினைவுக்கு வருகிறது. அந்தப்பிள்ளை மாபெரும் படைப்பாளி, பத்தியின் அடையாளம், இறையின் இன்னொரு வடிவம் என்று பல காட்சிகளை காணத்தருகிறது. ஆனால், உள்ளங்கையை நீட்டு என்று, எல்லா பள்ளிக்கூடங்களின் (ஆத்திகம், நாத்திகம்...) இன்றைய ஆசிரியர்களும் பிரம்பை கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்; சிலர் வரிசையாக, சிலர் கும்பலாக.

சிவநெறியை பற்றி நின்று, மால்நெறியை சிறிதும் அறியாதவனாயிருந்தாலும், பத்திமை என்பது எல்லா நெறிக்கும் பொதுமரபுதான்; அந்தப்பொதுமரபிலும், தமிழ்மரபிலும் நின்று ஓரிரு மடல்களை நான் எழுதினாலோ, அதிலேதும் பிழைத்தாலோ அன்னை ஆண்டாள் என்னைமட்டும் வெறுத்துவிடவா போகிறாள்?

(தொடரும்).

அன்புடன்
நாக.இளங்கோவன், 14/1/18

Thursday, January 04, 2018

ஆன்மீகமும் புற-ஆன்மீகமும்

:ஆன்மீகத்தை உங்களுக்கு சொல்லித்தாரேன் என்று ஒரு மராட்டிய நடிகன் கிளம்பியதும், துள்ளியெழுந்து, இது "பெரியார் மண்", "பெருங்காய மண்" என்று உளறித்தவிப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இவர்களின் ஆன்மீக மறுப்பு என்பது நாத்திகக்களத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்பு. ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்றவாறே போனால் எப்படி?
எந்த ஆயுதத்துக்கு எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தி வேண்டாம்?
தமிழ்நெடுவரலாற்றில், அறியப்பட்ட நூல்களில் முதனூலான தொல்காப்பியமே ஒவ்வொரு திணைக்கும் இன்னின்ன தெய்வம் என்ற பதிவை தாங்கியிருக்கிறது. அதன்பின்னர் முழுநூலாக நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இறைப்பாட்டாக காணக்கிடைக்கிறது. பரிபாடல், திருக்குறள் உள்ளிட்ட பழம்பெரு நூல்களில் ஆன்மீகத்தை காணமுடியும்.
அதன்பின்னர், கண்ணப்பர், காரைக்காலம்மை, திருமூலர், நால்வர், 63 நாயன்மார்கள், ஆண்டாள் உள்ளிட்ட 12 ஆழ்வார்கள் என பல்கிப்பெருகி, சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி என விரிந்து, பட்டினத்தடிகள், தாயுமானவர், அருணகிரி, குமரகுருபரர் என தொடர்ந்து, வள்ளலார் வரை கால நெடுகிலும் ஆன்மீக பூமியாக இருக்கின்ற தமிழகத்திற்கு இணையாக வேறொரு மாநிலத்தை மொழியை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமுடியாது எனுமளவிற்கு ஆன்மீகம் இங்கே பரந்து விரிந்துதான் கிடக்கிறது.
செயினமும் பௌத்தமும் சீண்டிப்பார்த்த போது, யானை சிறு தேங்காயை இடறுவதுபோல, இடறித்தள்ளிய ஆன்மக்கோட்டை இந்த மண்.
இவை எல்லாவற்றையும் கெட்டியான போர்வையை போட்டு மூடிவிட்டு, இது பெரியார் மண், பெரியார் மண் என்று கூவுவது எவ்வளவு பெரிய அறியாமை?
இப்படி, தன்னிலையால், தமிழ்நிலையை புறந்தள்ளி பேசுவதால்தான் மாற்றானும் ஆன்மீகம் என்ற பெயரில் இங்கே கடைபோட கிளம்புகிறான்.
கெயிக்குவாடின் ஆன்மீகத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரே கேள்வி:
ஊரிலும் வீட்டிலும் குலதெய்வம் உள்ளிட்ட எல்லா சாமிகளையும் கும்பிட்டுக்கொண்டே, வரலாற்றில் இருக்கும் முழுமையான தமிழ் ஆன்மீக அடித்தளத்தை நீங்கள் புறந்தள்ளினாலும், நீங்களே ஏற்கிற வள்ளலாருடைய மண் இந்த மண் என்பதை ஓங்கிச்சொல்வீர்களா? வள்ளலாரால் காக்கப்பட்ட மண்ணான இம்மண்ணுக்கு மராட்டியத்திலிருந்து இறக்குமதியாகும் புற-ஆன்மீகம் தேவையில்லை - போடா போ! என்று சொல்வீர்களா?
உங்கள் குறிக்கோள் நேர்மையானது என்றால், தமிழ் ஆன்மீகத்தை மறைக்காமல், புறத்தேயிருந்து உள்நுழையும் புற-ஆன்மீகத்தை தமிழ்-ஆன்மீகத்தால் மறுத்து குரல் கொடுங்கள். அப்பொழுதுதான் தமிழ்-எதிர்-பிற என்று இருக்க முடியும். அந்தத்தமிழ், வடக்கேயிருந்து வரும் பிற பித்தலாட்ட ஆன்மீகத்தை துடைத்து எறிந்துவிடும்.
இல்லாவிடில், நீங்களும் கெட்டு, இம்மண்ணும் கெட்டு எல்லாமே நாறிப்போக வழிகாட்டிக்கொண்டே இருக்கும்.
வேண்டுமானால், உங்களுக்காக சிறிய இளக்கம் சொல்கிறேன்.
மற்ற யாரையும் உங்கள் பகுத்தறிவின்பாற்பட்டு முதன்மையாக கூறவேண்டாம்; தொன்மையை போற்றுபவரானால், முருகாற்றுப்படை செய்த நக்கீரரின் மண் இது என்று கூறுங்கள். அல்லது அண்மையை மதிப்பவரானால், "வள்ளலாரின் மண்" என்று சொல்லுங்கள். புற-ஆன்மீகரை பார்த்து நீ இதில் யாரடா? என்று கேளுங்கள்.
எது அகம், எது புறம்? என்ற வேறுபாடுகூட தெரியவில்லையெனில் எப்படி
வெல்ல முடியும்?
கூடவே இது பெரியாருடைய மண் என்று வேண்டுமானால் உங்கள் ஆசைக்கு போட்டுக்கொள்ளுங்கள். நான் குறுக்கே வரமாட்டேன்.
ஆனால் மண்ணின் ஆன்ம வரலாற்றை மொத்தமாக மண்ணால் மூட விடமாட்டேன்.
The war between "Nothing vs Everything" is absurd. So the Nothings have to learn to take up Something to fight Everything, and let them take Tamilthing.
அன்புடன்
நாக.இளங்கோவன்
4/1/18