Pages

Thursday, May 21, 2015

தமிழுக்குச் சமயம்செய்யும் கொடை - ஒருமறுபார்வை:

தமிழ்நாட்டில் ஒரு மாயை இருக்கிறது. தமிழில்
ஒரு நூல் எழுதிவிட்டால் அது தமிழுக்குச்செய்த
கொடையாகவும் தொண்டாகவும் மாறிவிடுகிறது.
அதையே "இன்னமதம்" தமிழுக்குச்செய்த கொடை
என்று சொல்ல எந்த மதத்துக்காரரும் வெட்கப்படுவதில்லை.

காட்டாண்டியாக ஒலிக்கத் தொடங்கியதில் இருந்து
தமிழ் முளைத்துத் தழைத்தது. அதனை இன்றைக்கு
தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் தான் தமிழுக்குச்
செய்யும் கொடையாகவும் தன்சமயம் தமிழுக்குச்செய்த
செய்கின்ற கொடையாகவும் கருதிக்கொள்வது
வெட்கக்கேடான செயல்.

தமிழனாய்ப்பிறந்து, தமிழைக்கற்று, தமிழில்
எழுதினால் அது தமிழுக்குச்செய்த
கொடையாகிவிடுமா? தமிழ் என்ற ஒன்று
ஒவ்வொருவரிடம் பிச்சைப்பாத்திரத்தை
ஏந்தி நிற்கிறதா என்ன?

ஆங்கிலத்தில் நூலெழுதும் ஒவ்வொருவரும்
இப்படித்தான் ஆங்கிலத்திற்கு இன்னார் அல்லது
இன்ன மதம் செய்த கொடை என்கிறாரா? இந்தியர்கள்
பலபேர் ஆங்கிலத்தில் நுட்பநூல்கள் எழுதியுள்ளனர்.
உடனே அவற்றையெல்லாம் இந்தியர்கள் ஆங்கிலத்திற்குத்
தந்த கொடை என்கிறார்களா?

சமயவரலாற்றை எடுத்துக்கொண்டால்,
செயினம், பௌத்தம், வைதீகம், கிறித்தவம், இசலாம்
என்ற ஐந்து சமயங்களுமே வெளிநாட்டில் இருந்து
வந்தவையே. ஆரியத்தின் திசை வடக்கு என்றால்,
இவை அனைத்துமே ஆரியசமயங்கள்தான்.
(திராவிடத்தின் கண்ணுக்கு வைதீகம் மட்டுமே
ஆரியமாகத்தெரியும். அது தனிக்கதை)
இவற்றைப்பின்பற்றியவர் யாவருமே
தமிழர்கள்தான். அப்படி, தமிழரால்
எழுதப்படுகின்ற நூல், எப்படி அவர் சார்ந்த
சமயம் தமிழுக்குச் செய்த கொடையாக
மாறிவிடும் என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு மதம் இங்கே வருகிறதாம்.
அதைச் சிலர் பின்பற்றுகிறார்களாம்.
உடனே அம்மதம் தமிழுக்கு கொடை செய்கிறதாம்.
கொஞ்சமாவது ஏரணம் வேண்டாமா?
என்னைப்பொறுத்தவரை இதுவொரு பித்துக்குளி
சிந்தனை என்பேன். இந்தப்பித்துக்குளிப்போக்கைத்
தொடக்கியவர்களும் நாடு போற்றும் அறிஞர்கள்தான்.
இவர்கள் எழுத்து வள்ளலாக இருக்கலாம் -
ஆனால் தமிழ்மொழியை பிச்சைப்பாத்திரத்தோடு
நிற்கவைத்தவர்கள். இந்தச்சிந்தனைப்போக்கு மாறவேண்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்