Pages

Tuesday, June 22, 1999

சிலம்பு மடல் 11

சிலம்பு மடல் - 11 கரிகாலனும் சித்திரமண்டபமும்!
புகார்:
இந்திர விழவூரெடுத்த காதை:

சோழப்பேரரசை ஒருகாலத்தில் ஆண்ட கரிகாற்சோழன் எனப்பட்ட திருமாவளவன், தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் பகை கிட்டாமல் வருந்தி பகைதேடி வடக்கு செல்கிறான்; வடக்கிலனைவரையும் வென்றவனை
மேலும் வடக்கு நோக்கி செல்லமுடியாமல் இமயமலை தடுக்கிறது. அதனாற் சினந்து அவன் இமயத்தில் புலிக்கொடியை ஏற்றி விட்டு நாடு திரும்புகிறான்.

"இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம் (நண்ணார்=பகைவர்)

மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்என"...........

அப்படித் திரும்பும் வழியிலே வடபுலத்து வச்சிர, மகத, அவந்தி நாட்டு அரசர்கள் முறையே முத்துப் பந்தல், பட்டி மண்டபம், தோரண வாயில் முதலியவைகளைத் திறையாக சோழனுக்குத் தருகின்றனர். வெவ்வெறு நாட்டினதாகிய இம்மூன்றையும் சோழன் புகாரிலே ஒரே இடத்தில் சேர்த்து அமைத்துக் கட்டிய மண்டபம் 'சித்திரமண்டபம்' எனப்பட்டது.

"மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்".........

உயர்ந்தோர் போற்றும் இந்த சித்திர மண்டபம் செய்யப் பெற்ற புகாரிலே வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதச் சதுக்கம், பாவை மன்றம் என்ற அய்ந்து வகை யான மன்றங்கள் இருந்தன.

வெள்ளிடை மன்றம் என்பது பொருள்களை சேமித்து அல்லது
பாதுகாத்து வைப்பதற்கான ஒரு இடம் அல்லது பண்டக சாலை. அதற்குக் காப்போர் இல்லை; கதவுகளும் இல்லை.

பொருள்களை அல்லது பண்டங்களைக் கள்வனிடம் இருந்து காக்கும் அவசியம் இல்லை; காரணம் இந்தக் கவர்வார் இல்லாத செல்வநிலையாகவே இருந்திருக்க வேண்டும். தற்போதும் வெளிநாடுகளில் வேந
லநேரம் முடிந்த பின் கடைகள் திறந்தோ, காவலில்லாமலோ அதிகப் படியான பாதுகாப்பு இல்லாமலோ இருக்கக் காண்கிறோம்.

அப்படித்தான் இந்தத் தமிழகமும் அப்பொழுது இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. ஒரு வேளை யாரும் கவர்ந்தால் அப்பண்டத்தை அவர்கள் தலையில் கடுமையாக சுமத்தி ஊரைச் சுற்றி வரச்செய்து கடுமையாக தண்டித்தனர்; (வெளிநாடுகளில் சிலவற்றில் குப்பையைக் கீழே போட்டால் ஊரைக் கூட்டச்
செய்யும் தண்டனை போல) ஆதலின் களவாட நினைப்போரை நடுங்கச் செய்யும் இந்த 'வெள்ளிடை மன்றம்'.

"வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றம்"........

(உள்ளுநர்=நினைப்போர்;கட்போர்=திருடர்)

'இலஞ்சி மன்றம்' என்பது ஒரு பொய்கையைக் கொண்டது. இப்பொய்கையில் முழுகி எழும், கூனர், குள்ளர், ஊமையர், தொழுநோயாளர் போன்றவர்களுக்கு உடற்குறைகள் உடன் மறைந்திடுமாம்!

'நெடுங்கல் மன்றம்' என்ற மன்றத்தில் நெடிய கல் ஒன்று நடப்பட்டிருக்க அக்கல்லைத் தொழுது சுற்றி வரும், பிறரால் வஞ்சனை மருந்து ஊட்டப்பட்டதால் வாடுவோர், (செய்வினை, முட்டை மந்திரித்தல்,
ஏவல் போன்ற செய்திகளை கிராமங்களில் கேட்கலாம்) அரவத்தால் தீண்டப்பட்டோ ர், பேயினால் பெருந்துன்பமுற்றோர் அனைவருக்கும் உடன் துயர்கள் நீங்குமாம்.

போலிச் சாமியார்கள், கணவனுக்கு துரோகம் செய்து பிற ஆடவருடன் கூடும் பெண்டிர், அரசனைக் காட்டிக் கொடுக்கும் அமைச்சர், பிறன் மனை விழைவோன், பொய்ச்சாட்சி சொல்வோர், புறங்கூறுவோர் போன்றவர்கள் "என் கையில் உள்ள
கயிற்றில் அகப்படுவர்" எனக் கடுங்குரலில் கூறி அவ்வாறு அகப்படுவோரை நிலத்தில் அடித்துக் கொன்று தின்னும் பூதம் இருந்த இடம் 'பூதச் சதுக்கம்' எனப்பட்டது! இந்த வகையான தீயவர்களை ஆசிரியர் அழகுபெயர்களால் அழைப்பது கற்கத் தக்கது!

"தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்,
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்"

(கரி=சாட்சி; பாசம்=கயிறு)

அரசின் கோல் தவறினாலும் அல்லது அறவோர் சபை வழுவினாலும் அதனால் பாதிக்கப்பட்ட மாந்தர் தம் துன்பத்தை வாயால் உரைக்காது கண்ணீரால் வெளிப்படுத்த ஒரு மன்றம்; அது பாவை மன்றம்; அய்ந்து வகை மன்றத்திலும் சிந்தனையைக் கவருவது இந்த பாவை மன்றம் என்றால் அது மிகையாகாது.

"அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழூஉம் பாவை மன்றமும்"...........

நாடெங்கும் அழுகுரலாகவே இருக்கும் என்பதால்தான் இந்நாள் இந்நாட்டில் பாவை மன்றங்கள் இல்லையோ ?

எங்கும் அழுவோர்க்கு எதற்குப் பாவைமன்றம் என்ற நிகழ்வா ?

அரசமன்றம் பாவமன்றமானபின் பாவைமன்றம்தான் எதற்கு ?

நீதிதேவதையின் நாவையும் வாங்கும் மாந்தர்முன் பாவைதான் எதற்கு ?

இந்த ஐவகை மன்றங்களிலும் இந்திரவிழாத் தொக்கத்தில் உயிர்ப்பலி இடுவது வழக்கமாக இருந்திருக்கிறது!

அன்புடன்
நாக.இளங்கோவன்
22-சூன்-1999

Monday, June 14, 1999

சிலம்பு மடல் 10

சிலம்பு மடல் - 10 இந்திரவிழாவும் பலிக்கொடையும்!
புகார்:
இந்திர விழவூரெடுத்த காதை:

மருவூர்ப்பாக்கத்தையும், பட்டினப்பாக்கத்தையும் பிரித்து அல்லது சேர்த்து வைத்த பகுதியிலே பேரங்காடி ஒன்று இருந்தது; நாட்பொழுதில் இயங்குவதால் அது நாளங்காடி எனப்பட்டது.

"இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்"........

(ஓதை = ஒலி)

அந்த நாளங்காடியிலே பூதம் ஒன்றின் கோயில் இருந்தது: இந்த பூதமானது சோழமன்னனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பதற்காக, தேவர் தலைவன் இந்திரனால் (தேவர் கோமான்) அனுப்பப்பட்டதாம்.

"வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கெனத்
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதம்"

இந்த பூதத்தை மறக்குல மகளிர், சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாளன்று (சித்திரைப் பெளர்ணமி ) வழிபட, இந்திர விழா தொடங்குகிறது.

"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென".......

மகளிர், ஊன்தசைச் சோறு, பொங்கல், மலர் போன்றவற்றை வைத்து வழிபட்டு, துணங்கைக் கூத்து (இருகைகளையும் மடக்கி அடித்து ஆடும் கூத்து), குரவைக் கூத்து (கைகோர்த்தாடுவது) போன்றவற்றை ஆடி "எம்மன்னனின் ஆட்சி முழுதும் பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் பெருகுக" என வா
ழ்த்தி வழிபடுகின்றனர்!

"பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி"...........

மறக்குல மகளிர் தன் அரசனின் ஆட்சி நலம் பெற வாழ்த்தி வழிபட, வீரர்களின் வீரத்துக்கு வரம்பு அல்லது எல்லை என்றால் "தன் தலையைத் தான் அரிந்து, தம் மன்னனுக்குத் துன்பம் நேர்ந்தால், அதிலிருந்து அவனைக் காப்பதன் பொருட்டு பூதத்திற்குப் பலியிடலே" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, வீரமிக்க மருவூர் மறவரும், பட்டினப் பாக்கப் படைவீரரும் பலிபீடம் சென்று, "எம்மன்னனுக்கு ஏற்படும் இன்னல்களை ஒழிப்பாயாக" என்று வேண்டி, ஆரவாரித்து, பலபோர்களிலே வெற்றிவாகை சூடிய வீரர்திலகங்கள், கண்டோ ரை அச்சுறுத்தும் சுடுகொள்ளி போன்ற கண்கள் பொருந்திய தம் வலிமையான
தலையைத் தம் கரங்களாலேயே அரிந்து, அரிந்த கரங்களினாலேயே அத்தலையை பலிபீடத்தில் வைக்க(பலிக்கொடை!!), அதை ஏற்றுக்கொண்ட பூதம் நடுக்கம் தருமளவிற்கு இடிமுழக்கம் போன்ற குரல் ஒலிக்க,
தலைதந்த வீரரோ/வீரர்களோ, தம் தலை அகன்றபின்னும் தங்கள் உடலோடு கட்டிச் சென்ற "மயிர்க்கண் முரசை" தம் கரங்களால் தட்டி ஒலி எழுப்புகின்றனர்:

"மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுபலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகென
கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்யுறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி; ".......

படிக்கும்போது, நினைத்துப் பார்க்கவே சிலிர்க்கச் செய்யும் காட்சி கண்முன் விரிவது, கட்டுப் படுத்த இயலாதது.

சிலம்பின் காலம் சுமார்1800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். கரிகால் பெருவளத்தான் காலத்துக்குச் சற்றுப் பிந்தையது என்றும் அறிவோம். அதற்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது தமிழர் இலக்கணமான தொல்காப்பியம்.

அதில் மருதநிலக் கடவுளாகக் குறிக்கப்படுபவன் இந்திரன். மருதநிலம் என்றால் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமும் என்று நாம் அறிவோம். விவசாயத்திற்குத் தேவை மழை. அந்த மழையை அளிப்பது மேகம். அந்த மேகங்களின் இயக்கம் கடவுளால் என்ற நம்பிக்கையில், அவற்றை இயக்கும் கடவுள் இந்திரன் என்று பெயரிடப்பட்டு வழிபட்டது, காவிரிப்பூம்பட்டினம் கடற்கரை நகரமென்ற போதும் வேளான்மையால் சிறந்த சோழநாட்டின் பகுதியென்பதால் இந்திரவிழா மிகப் பொருத்தமான ஒன்றுதான்.

ஆனால் "தேவர்கோமான்" எனப்படும் போது "வானில் வாழும் தேவர்களின் தலைவன்" என்ற ஆரியக் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியக் காலத்துக்கும் சிலம்பின் காலத்துக்கும் இடையில்
கொள்கைகள் மாறி வலுப்பெற்றுவிட்டன என்று கருத முடிகிறது.

சோழமன்னனைக் காக்க பூதத்தை இந்திரன் அனுப்பினான் என்ற
கருத்தையும், அந்த பூதம் முழங்கியது என்ற கருத்தையும் பார்த்தால் இந்திரவிழா என்பது மூடவிழாவாகத் தோன்றுவதைத் தடுக்க இயலாது!

வானுறையும் தேவர்கள் மற்றும் அவர்கள் தலைவன் இந்திரன் என்றால் சோழநாட்டைக் காக்க அனுப்பிய பூதம் போல் பாண்டி நாட்டையோ, சேர நாட்டையோ காக்க ஏதாவது பூதம் அனுப்பப் பட்டிருக்க஧
வண்டும்! ஏன், இதர நாடுகளுக்கும் அனுப்பப் பட்டிருக்க வேண்டும்! ஆனால் தமிழ் இலக்கியங்கள் வேறெங்கும் அவ்வாறு காட்டவில்லை!

ஆக, இந்திரன் என்பவன் தமிழர் கடவுளாகப் படைக்கப் பெற்றிருக்கிறான்; ஆனால் இடைக்காலத்தில் அவன் திரிக்கப் பட்டு தமிழரிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறான் என்று கருத வாய்ப்பிருக்கிறது.

அடுத்து, தன் தலையைத் தான் அரிந்து தம் மன்னன் நலத்திற்காகப் "பலிக்கொடை" செய்வது என்பது வீரத்தின் உச்சமாகக் கருதப் படலாம்!

அச்செயலுக்கும், இற்றைய மன்னர்கள் அல்லது தலைவர்களுக்காகத் தமிழகத்தில் "தீயாடிச் சாதலுக்கும்" (தீக்குளிப்பு) யாதொரு வேறுபாடும் இல்லை!

மன்னர் அல்லது தலைவருக்காகத் தீயாடிச் சாதல் முட்டாள்தனமென்றால், அற்றைய நாளில் தலைஅரிந்து செத்ததும் முட்டாள்தனமே!

ஈராயிரம்/பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் இத்தமிழ்ச் சமுதாயம் உணர்வின் உந்தல்களிலும், வீரவழிபாட்டிலும் வாழ்ந்து வதங்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

ஒருபுறம் பகையின் கையில் கிட்டாதிருக்க விடமுண்டு சாகிறார் தமிழர்! தமிழினத்துக்காக சமுதாயத்துக்காக புறம் படைக்கிறார்!

அப்புறத்தை வாழ்த்தித் திரும்புகையில் இப்புறம் தனி மனிதருக்காக, அரைகுறை மனிதருக்காகத் தீயாடிச் சாகிறார் தமிழர்! இப்புறத்தை எண்ணி நாணுதல் வேண்டும்!!

மகளிரும் வழிபடுகிறார்; வீரரும் வழிபட்டு, பலிக்கொடை செய்கிறார்! எதற்காக என்று பார்த்தால் 'மன்னன் நலத்திற்காக' !

அக்காலமானது "மன்னவன் எவ்வழி; மன்னுயிர் அவ்வழி" என்று புறம் சொன்ன அறத்தை அடிப்படையைக் கொண்டது!

கடவுள், அரசு என்ற இரண்டும் தனித்தனியாக இயங்கின; மக்களைக் காப்பவன் அரசனாகவே இருந்தான்; அரசன் அறவழி நடப்பவனாக இருந்தான்; இக்கதையில் வரும் பாண்டியன் நெடுஞ்செழியனே எடுத்துக்காட்டு. அவன் அறவழி நடந்தால் குடிகளுக்குக் கவலையில்லை என்று மக்கள் நம்பினர். அதைத்தான்,

"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"

என்ற புறப்பாடல் அடிகளும் சொல்கிறது!

ஆதலால் குடிகளைக் காக்கும் அரசனைக் காக்க, குடிகள் தாம் நம்பிய கடவுளை வேண்டுகிறார்கள்; தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில்!

காக்கும் பொருளைவிட காக்கப்படும் பொருளே முதன்மை பெறுகிறது!

அரசனோ குடிகளையும் காத்து, பின்னர் பல நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்பட்ட கடவுள்களையும், மதங்களையும் போற்றிக் காக்கின்றான்!

தற்காலம் வேறு; இந்த மாண்புகள் மாறிவிட்டன!

மதமும், கடவுளரும் மனிதரை ஆட்டிவைக்க, மனிதர் பிரிந்து நின்று, முதலில் மதத்தையும் கடவுளையும் காக்க மன்னரை வேண்டி நிற்கின்றனர்! மதத்தைக் காக்கவே அரசுகள் நடக்கின்றன.

தன் மன்னனைக் காக்க வேண்டி தன்னைக் கொடுத்த தத்துவம் மாறி, தன் மதத்தைக் காக்க மக்களைப் பலிகொடுக்கும் பண்பாடு வளர்ந்து விட்டது!

தேவைகளை மாற்றிக் கொண்டு தேம்பி நிற்கிறதோ தற்போதைய
சமுதாயம்?


அன்புடன்
நாக.இளங்கோவன்
14-சூன்-1999

சிலம்பு மடல் 9

சிலம்பு மடல் - 9 காவிரிப்பூம்பட்டினம்!
புகார்:
இந்திர விழவூரெடுத்த காதை:

அலைநீராடை மலைமுலையாகத்து
ஆரப்பேரியாற்று மாரிக்கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை....

நிலமகளுக்கு, அலைமோதும் கடலை ஆடையாக்கி, ஓங்கி உயர்ந்த மலைகளை முலைகளாக்கி, அம்மலை வழிவரும் ஆறுகளை கழுத்தில் அணியும் மாலைகளாக்கி, அம்மலைமுடி மோதும் மேகங்களைக் கூந்தலா
க்கி, நிலமகளை அழகுபார்த்திருக்கும் சிலம்புக் கவிஞனின் கற்பனையில் கரைந்து கொண்டே, பூபாகத்தின் ஒருபகுதியாம் பூம்புகாரின் இரு பகுதிளான மருவூர்ப் பாக்கத்தையும், பட்டினப் பாக்கத்தையும் கவிநதஅடிகளில் விவரிக்கும் ஆசிரியரின் பாங்கை படிப்போர்க்குக் கவிஇன்பத்தை அள்ளி அள்ளி அளிப்ப஧
தாடு, சொல்லவரும் கருத்தை அணு அணுவாக ஆராய்ந்து அதன் முழுமையை வெளிப்படுத்தும் வழிமுறையை கற்பிப்பதாகவும் இருக்கிறது.

நீளம் அதிகம் எனினும், கவிச்சுவைக்காக, இந்த இரு பகுதிகளிலும் வாழ்ந்த பலதரப்பட்ட மக்களை கவிஞர் விவரிப்பதை படித்தல், மகிழ்தல்!

மருவூர்ப்பாக்கம்.
--------------------

வேயாமாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்;

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;

காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;

கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழழினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்; ......

பட்டினப்பாக்கம்:
--------------------

கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோர் இருக்கையும்
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்;

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்;
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்;

கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாண் இருக்கையும்;

பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்; ..

மருவூர்ப்பாக்கத்திலே தொழில் செய்வோர், வணிகம் செய்வோர், பிறர் இடு பணிகள் செய்வோர் சேர்ந்து வாழ்ந்ததாகவும்.

(சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கம் )

பட்டினப்பாக்கத்திலே அரசர், அரசுப்பணி செய்வோர், போர்ப்பணி செய்வோர், அவர்களுக்கு சுகம் அளிப்போர் மற்றும் ஏவல் செய்வோர் வாழ்ந்துவந்ததாயும் அறிய முடிகிறது.

(பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கம்)

அன்புடன்
நாக.இளங்கோவன்
14-சூன்1999